மீனவர்கள் நிரந்தர தீர்வு கோரி காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்தம்

        இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி நாகை மாவட்ட மீனவர்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி காரைக்கால் பகுதி மீனவர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று தொடங்கிய இப்போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவ கிராமங்கள் இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளன.
இதனால், காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 400 விசைப்படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து பின்னர் விடுவித்ததாகத் தெரிவித்துள்ள மீனவர்கள், இதுபோன்ற நிலை தொடர்வதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்திய - இலங்கை கடற்பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு இன்றி மீன்படிக்கும் உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தினர்.
-நாகை மகாகிருஷ்ணன்